369 sovereign gold jewels stolen from business man house
செய்யாறில், தொழில் அதிபரின் வீட்டில் புகுந்து 369 சவரன் நகை, ஒன்றைரை கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து திங்கள்கிழமை காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது.
செய்யாறு பெரிய தெருவில் வசிப்பவர் வி.ஜி.பாபு (52). இவர் ரைஸ் மில், திருமண மண்டபம் ஆகியவற்றை வைத்து தொழில் செய்து வரும் தொழில் அதிபர் ஆவார். இவரின் மூத்த மகள் பரணிப்ரியாவின் திருமணம் சென்னை பூந்தமல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருமணத்திற்காக வந்த உறவினர்களை அழைத்துக் கொண்டு தொழிலபதிபர் பாபு ஞாயிற்றுக்கிழமை காலை சென்னைக்கு சென்றாராம். வீட்டின் காவலுக்காக சம்பத் என்பவர் நியமிக்கப்பட்டு இருந்தததாகத் தெரிகிறது. அவரும் திங்கள்கிழமை அதிகாலை எழுந்து திருமணத்திற்கு சென்றுவிட்டதாகத் தெரிகிகிறது.
திங்கள்கிழமை காலை திருமணம் முடிந்ததும் உறவினர்கள் ஒரு சிலர் சென்னையில் இருந்து செய்யாறுக்கு தொழிலதிபர் வீட்டிற்கு வந்ததாகத் தெரிகிறது. அப்போது தொழிலதிபரின் வீட்டின் பின்பக்க கதவுகள் மற்றும் பீரோக்கள் திறந்த நிலையில் இருந்துள்ளதை குறித்து தொழிலதிபர் பாபுவிற்குத் தெரிவித்தாகத் தெரிகிறது.
தகவல் அறிந்த வந்த வி.ஜி.பாபு வீட்டை பார்வையிட்டார். அப்போது, வீட்டின் மேல்மாடி ஜன்னல் பகுதியில் இருந்த இரண்டு இரும்புக் கம்பிகள் அறுக்கப்பட்டு, வீட்டிற்குள் குதித்துச் சென்ற மர்ம நபர்கள், மூன்று பீரோக்களில் வைத்து இருந்த மனைவி ராணியின் நகைகள் 150 சவரன், மாமியார் நிர்மலாவின் நகைகள் 50 சவரன், திருமணம் நடைபெற்ற மகள் பரணி ப்ரியாவிற்கு கொடுப்பதற்காக வாங்கப்பட்ட புதிய நகைகள் 169 சவரன், ஒன்றைரை கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரொக்கப் பணம் ரூ.10 ஆயிரத்தினை மர்ம நபர்கள் திருடிச் சென்றதுத் தெரிய வந்தது.
இந்த திருட்டு குறித்து தொழிலதிபர் வி.ஜி.பாபு செய்யாறு காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல் ஆய்வாளர் செந்தில் வழக்குப் பதிவு செய்து மோப்பநாயை வரவழைத்தும், தடவியல் நிபுணர்கள் மூலம் கைரேகைகளை பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.