Onion price go high in India
இந்தியாவில் வரலாறு காணாத வகையில் வெங்காயத்தின் விலை உயர்ந்ததையடுத்து ஏற்றுமதிக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் வெங்காய விலை வரலாறு காணாத அளவில் கிலோ ஒன்றுக்கு ரூ.60ல் இருந்து ரூ.70ஆக அதிகரித்துள்ளது. மும்பையில் ரூ.56 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.60 ஆகவும், சென்னையில் ரூ.75ஆகவும் உள்ளது. இதனை கட்டுப்படுத்த அடுத்த 15 நாட்களுக்கு வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதுகுறித்து மத்திய வேளாண் துறை அமைச்சர் சரத்பவார், நுகர்பொருள் துறை அமைச்சர் கே.வி.தாமஸ் ஆகியோர் நேற்று ஆலோசனை நடத்தினர். இதுகுறித்து கே.வி.தாமஸ் கூறுகையில், வெங்காய ஏற்றுமதியை கட்டுப்படுத்த குறைந்தபட்சம் டன்னுக்கு 650 டாலர் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது உள்ள நிலைமையை கருத்தில் கொண்டு ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை சமாளித்து வெங்காய வரத்து அதிகரிக்க செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தனியார் வியாபாரிகள் வெங்காயம் இறக்குமதி செய்ய சலுகை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள நிலைமையை சமாளிக்க டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள தனியார் வியாபாரிகள் வெளிநாடுகளில் இருந்து 7000 டன் வெங்காயம் இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளனர் என்றனர். ஏற்கனவே பாகிஸ்தான், சீனா, ஈரான், மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து வெங்காய இறக்குமதி செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவது குறிப்பிடத்தக்கது.