200 sovereign jewels were looted from a pawn shop near Sivagangai
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மதகுபட்டி எனும் ஊரில் உள்ள முக்கிய சாலையில் இருக்கும் நகை அடகுகடையின் பூட்டுகளை சிதைத்து 200 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை – திருப்பத்தூர் முக்கிய சாலையில் மதகுபட்டி கிராமம் இருக்கிறது. இந்த முக்கிய சாலையில் கருமந்தன்பட்டி கிராமத்தில் உள்ள திரு.சுப்ரமணியன் என்ற நபர் கடந்த பல ஆண்டுகளாக நகை அடகு கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.
அவரது கடை பகுதியை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது தங்க நகைகளை அடகு வைத்து வைத்து அதன் மூலம் பணம் கடன் வாங்குவது வழக்கம். சிவகங்கை பகுதியில் சமீப காலமாக பலத்த மழை பெய்து வருவதனால் ஏராளமான விவசாயிகள் தங்க நகைகளை அடகு வைத்து பணம் கடன் பெற்று விவசாய வேலைகளை ஆரம்பித்துள்ளனர். அதனால் எப்போதும் உள்ளதை விட தங்க ஆபரணங்கள் சற்று அதிகமாக இருந்துள்ளது.
அடகு கடையில் மேலாளராக செல்லப்பா என்பவர் வேலை செய்து வருகிறார். வழக்கம் போல நேற்று இரவு சுமார் 9மணிக்கு கடையை மூடி விட்டு அவர், வீட்டிற்கு சென்று விட்டனர். இன்று காலை கடையை திறந்த போது அதன் பூட்டுக்கள் உடைக்கபட்டிருந்ததை கண்ட மேலாளர் செல்லப்பா, உடனே இது பற்றி உரிமையாளர் சுப்ரமணியனுக்கும், மதகுபட்டி காவல்நிலையத்திற்கும் தகவல் அளித்துள்ளார்.
விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள்இன்ஸ்பெக்டர் கண்ணன், எஸ்ஐ பாண்டியன் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் கொள்ளை நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கொள்ளையர்கள், வெளிப்புற கதவில் இருந்த பூட்டுகளை உடைத்து உள்ளே பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்க பட்டிருந்த நகைகள் அனைத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளர்கள். கொள்ளையடித்து சென்ற நகைகளின் மதிப்பு சுமார் ருபாய் 45 லட்சம் இருக்கும் என்று தெரிகிறது. லைக்கா என்ற பெயரை கொண்ட மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.
கொள்ளையடிக்கப்பட்ட கடையில் இருந்து ஓடி மதகுபட்டி கண்மாய் கரை வரை சென்ற மோப்ப நாய் லைக்கா அதற்குபின் நகரவில்லை. இந்த அடகு கடை கொள்ளை சம்பவம் பற்றி மதகுபட்டி காவல் துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக காரைக்குடி பகுதியில் மட்டும் தான் கூடுதலாக கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தது. சமீப காலமாக கொள்ளைகாரர்கள் காரைக்குடி பகுதியை தாண்டி சிவகங்கை பகுதிகளுக்குள் நுழைந்திருக்கின்றனர்.
கொள்ளை சம்பவம் பற்றி மேலாளர் செல்லப்பா பேசுகையில் எப்போதும் போல கடையை நேற்று பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டோம், இன்று காலையில் கடையை பார்த்த போது கொள்ளை நடந்தது தெரிய வந்தது. சுமார் ருபாய் 45 லட்சம் மதிப்புடைய நகைகள் கொள்ளை போயிருக்கிறது என்று கூறினார்.
கொள்ளை சம்பவம் பற்றி கேள்விப்பட்ட நகைகளை அடமானம் வைத்த வாடிக்கையாளர்கள் அடகு கடையின் முன் திரண்டு வந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பும் பீதியும் உண்டானது. காவல்துறை அதிகாரிகள் அவர்களை கலைந்து போகச் செய்தார்கள்.